Last Updated:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று தகவல்கள் பரவி உள்ளன. இது தொடர்பாக பிசிசிஐ கொடுத்துள்ள மெசேஜ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை தொடரை வென்றது. இறுதிப் போட்டியுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி நாளை தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மனதளவில் வீரர்களுக்கு அது உத்வேகமாக அமையும்.
50 – 50 ஓவர்களைக் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மிகப் பெரிய லீக் என்பதால் அதில் வெற்றி பெற இந்திய அணி தீவிர முயற்சி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது-
தேர்வு குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினர். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ரோஹித் சர்மா முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டார். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிசிசிஐ சில முக்கிய திட்டங்களை வைத்திருக்கிறது. கேப்டன்ஷிப் மாற்றம் மிக இலகுவாக நடக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். என்று தெரிவித்துள்ளன.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தளவில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பின்னர் ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஒரு நாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
February 05, 2025 3:49 PM IST